hot sale

Wednesday, 23 July 2014

மென்பொறியாளர்களின் நிலைமை, ஆனால் நம் நிலைமையும் அது தான்.

வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை வாடிக்கையாக மாறும்போது கொண்ட வியப்பு எல்லாம் விரக்தியாய் மாறும் என எதிர்ப்பார்த்தில்லை. சினிமா போலி பிம்பத்தை கொடுத்து சில சமயங்களில் யதார்த்தை மறைத்து விடும் என்று கேட்டதுண்டு. ஐ.டி.துறையில் இணைந்த பிறகு தான் இத்துறை பற்றிய பிம்பம் எவ்வளவு அபத்தமாக திரையில் அமைந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.
கடந்து செல்லும் நீண்ட நெடும் சாலையை கடக்க முடியாமல் மீளத் துடிக்கும் மன ஓட்டங்கள் ஏராளம். ராஜீவ் காந்தி சாலையில் மனதால் தொலைந்துபோன சில மனிதர்களின் கதைதான் இப்பதிவு.
ஐ.டி. துறையில் நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கைதான் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கதாப்பாத்திரப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.
உறக்கத்தை தேடும் கனவு:
என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் ரகு. கல்லூரி காலங்களில் எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பான். யாருக்கும் உதவிட தயங்க மாட்டான். படிந்த தலை, நெற்றியில் அணுதினம் பூசிய திருநீர், கையில் கல்கியின் புத்தகம், தன்மையாக பேசும் அணுகுமுறை, மொத்தத்தில் இவன் ஒரு சாந்த ஸ்வரூபி. அன்பன்றி யாரிடமும் வெறுப்பை சம்பாதித்திடாத ஓர் இளைஞன்.

ஒரே அலுவலகத்தில் நாங்கள் இருவரும் வேலை செய்ததால் உணவு உண்ணச் செல்லும்போது எப்போதாவது யதேச்சையாக சந்திப்பதுண்டு. வெகுநாட்களுக்குப் பிறகு அன்றொரு நாள் இவனை பார்க்க முடிந்தது. சுரத்தில்லாத முகத்தோடு இடுங்கிய விழிகள், முன்பிருந்த முடிகள் கொட்டிப்போய் அரை வழுக்கை மண்டையுடன் என்னை கடந்து சென்றான். பார்த்தாலே இவன் நிலைமை சரியாக இல்லை என்பதை உணர முடிந்தது. எப்படி'டா இருக்க? ஈவ்னிங் டி'க்கு பார்க்கலாமா? என்று கேட்டபோது 'ரொம்ப மோசமா இருக்கேன் டா. நேத்தி காத்ததால பத்து மணிக்கு வந்தேன்... இப்போதான் வீட்டுக்கு கிளம்புறேன். நான் வரலை அப்புறம் பார்ப்போம்' என்று கண்ணை கசக்கிக் கொண்டே சொன்னான். (அவன் கூறியபோது மதியம் ஒரு மணி).
எப்போதும் வாரத்தில் சனிக்கிழமையும் கட்டாயமாக வேலை பார்க்க வேண்டிய சூழல் இவன் ப்ராஜெக்ட்டில் இருந்தது. அதுவும் ஒவ்வொரு நாள் வேலை எப்போது முடியும் என்பதே இவனால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. திடீர் என்று பத்து மணிக்கு க்ளைன்ட்கால் வைத்துக் கொள்ளலாம் என்ற செய்தி வந்தால் அவ்வளவு தான். அன்று உறங்கிய மாதிரி தான். 'முடியல டா, சண்டே ஒரு நாலு லீவ் கேட்பதற்கே முன் கூட்டி பெர்மிஷன் வாங்க சொல்றாங்க. இப்படியே ஒரு வருஷமா போகுது. நான் ரிசைன் செய்து வீட்டுக்கே திரும்பலாம்ன்னு முடிவு செஞ்சுட்டேன்' என்றான்
சரி, வேலையை விட்டுட்டு என்னடா செய்யப் போகுற என்று கேட்டால்? 'தெரியல டா எங்க ஊருக்கே போகலாம்ன்னு இருக்கேன் (தஞ்சை). அங்கப்போய் எதாவது தொழில் செஞ்சுக்க வேண்டியது தான்' என்றான்.
'எதுக்கு டா ரிசைன் பண்ற? ப்ராஜெக்ட்டிலிருந்து ரிலீஸ் கேட்டு வேற எங்கயாவது போக வேண்டியது தானே!' என்று கேட்டேன். 'நீ வேற, நான் ஒரு மாசமா ரிலீஸ் கேட்கிறேன்... இந்த டிசம்பர்லேந்து ப்ராஜெக்ட் ரொம்ப ஹெக்டிக்காக போகுது. இப்போதெல்லாம் படுத்ததா தூக்கமே வரமாட்டேங்குது. 'இந்த ப்ராஜெக்ட்'ல இருப்பதால சரியான நேரத்துக்கு சாப்பிட முடியல, தூக்கத்தையே பார்க்க முடியல ப்ளீஸ் எனக்கு ரிலீஸ் கொடுங்க ' என்று எச்.ஆர் (மனித வளம்) கிட்ட பேசினால் 'நவம்பர் வரைக்கும் வெயிட் பண்ணுங்க அதுக்கு அப்புறம் ஆன்-சைட் தரோம், வேற ப்ராஜெக்ட் வாங்கித் தரோம்ன்னு வடை சுடறாங்க'. இல்லை எனக்கு இது முடியல, என்ன விட்டுடுங்கன்னு கெஞ்சினேன். எனது மேனேஜர் பெரிய தல எச்.ஆர் கிட்டேந்து இதை தெரிஞ்சுகிட்டு 'நீ தான் ப்ரைம் ரிசோர்ஸ், நீ இங்கயே இரு உனக்கு சீக்கிரமா பெரிய போஸ்ட் வாங்கித் தரேன்' என்கிறார்.
இதே ஆள் போன மாசம் 'நீ சராசரியாக பத்து மணி நேரம் தான் வேலை பார்க்குற, உன் வேலை ரொம்ப சுமார் ரகம் தான்'என்று கூறி எனக்கு மோசமான ரேடிங் கொடுத்தார். இப்போது ரிலீஸ் கேட்ட பிறகு 'நீ தானே முக்கியமான ஆள், நீ கிளம்பினால் எப்படி?' என்று ஏதேதோ துதி பாடுகிறார். இப்போ இவங்க ரீலிஸ் தரமாட்டேங்குறாங்க, சரி நான் வேலையை ரிசைன் செய்கிறேன் என்று கூறி பேப்பர் (ராஜினாமா கடிதம்) போட்டு விட்டேன்.
நான் வேலைக்கு சேர்ந்து அந்த நாளோடு இரண்டு வருடம் முடிவடைவதால் பாண்ட் காசு (பாண்ட் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடத்திற்குள் ராஜினாமா செய்தால் இரண்டு முதல் மூன்று மாத சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்ற கம்பெனியின் விதி) தரவேண்டாம் என்று நினைத்தேன். இப்போது எனது கடைசி நாள் முடிய இரண்டு நாட்களே உள்ள சூழலில் எச்.ஆர் பாண்ட் அமௌன்ட் ஐம்பதாயிரம் நீ கட்ட வேண்டும் என்கிறார். அதான் பாண்ட் பீரியட் முடிவடைந்து விட்டதே என்று கேட்டால், 'நீ உடம்பு சரியில்லன்னு இந்த வருஷத்துல பத்து நாள் தொடர்ந்து லீவ் போட்டிருக்கிற அதுக்காக இன்னும் பதினைந்து நாட்கள் வேலை பார்த்துட்டு போ. இல்லைன்னா ஐம்பதாயிரம் கட்டும்படி வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்புவேன்' என்று கூறுகிறார்.
'நான் சரியா வேலை செய்யலன்னு சொல்றாங்க, அப்புறம் இங்கயே இருன்னு படுத்தறாங்க இவங்களுக்குகெல்லாம் ஏன் கொஞ்சம் கூட மனசாட்சியே இருக்க மாட்டேங்குது? சரி டா நான் போய் அவங்கள பார்த்திட்டு வரேன்' என்று கூறி அவ்விடத்தை விட்டு விலகினான்.
வாழ்க்கையை நடத்த வேலை என்பதை மறந்து வேலை செய்வதற்கும் பொருள் ஈட்டுவதற்குமே வாழ்க்கை என்ற சூழல் இன்றைய சென்னை நகரத்தின் ஒரு புறம் உருவாகி வருகிறது. ஐந்து நாட்கள் மெஷின்களுடன் மெஷினாக வாழ்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் வாழ்க்கையின் அத்தனை இன்பங்களையும் அவசர அவசரமாக வாழப்பார்க்கும் மனிதர்கள் இவ்வலையிலிருந்து வெளிவரப் பார்த்தாலும் வேலையை துறந்து வெளியே வந்தால் அடுத்த பொழப்புக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற பயத்தினாலே நாளும் தெய்கின்றனர்.
இவனுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கிடைப்பதே கேள்விக்குறியாக இருந்தது. 'அடுத்து என்ன செய்ய போகிறேன்னு தெரியல டா, இருந்தாலும் ஊருக்கே திரும்பப் போய் எதாவது நல்ல வேலை அமைச்சுபேன்' என்று கூறிய அவனின் தன்நம்பிக்கை இங்கே பலரும் தேடும் ஒன்றாக இருக்கின்றது.
கேம்பஸ் இன்டர்வியு-வில் பல சுற்றுக்களை கடந்து ஒரு பெயர் பெற்ற நிறுவனத்தில் வேலை வாங்கி எத்தனை கனவுகளுடன் அவன் இந்த தகவல் தொழில்நுட்பத் துறையினில் நுழைந்திருப்பான். கோடிங்கில் எப்போதும் பிரிச்சு மேயும் திறன் கொண்டவனாக அவன் இருந்ததால் வேலை பார்ப்பதும் இவனுக்கு கடினம் கிடையாது, எப்போதும் செய்கின்ற வேலையை ரசித்து செய்யும் குணம் கொண்டவன், மிகுந்த நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இவன் தன் குடும்பத்து பொருளாதார பின்னடைவை மனதில் கொள்ளாமலா ராஜினாமா செய்யத் துணிந்திருப்பான்? இருப்பினும் இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கிறான் என்றால் அப்போது அவன் மன உலைச்சல் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
****
வீடு, மனைவி, மக்கள், வாழ்க்கை?
"ஆமாம் ப்ரோ நீங்க பேஸ்புக்குல இருக்கீங்களா?"
"ம்... இருக்கேன்டா தம்பி!"
"அப்புறம் ஏன் நம்ம டீம் மேட்ஸ் யார் பிரண்ட்ஸ் லிஸ்ட்லயும் நீங்க இல்லை?"
"ஆமாம் டா அங்க மட்டும்தான் நான் மனசுல நெனச்சத பேச முடியுது. அங்கயும் இவங்கள சேர்த்துகிட்டா, அப்புறம் அங்கயும் போலித் தனமா நடிக்க வேண்டியதாகிடும். நான் பாட்டுக்கு எனக்கு தோணினத சொல்லுவேன் அதெல்லாம் இவங்க கேட்டா அப்புறம் தேவை இல்லாம பேச்சு வார்த்தை உருவாகும்.
ஏன் அங்க அவங்கள எதாவது அசிங்கமா திட்டுவீங்களா? சீச்சீ இல்லைடா எனக்கு தோணினத சொல்லுவேன் அது நிறைய பேரால ஏத்துக்க முடியாது. உதாரணமா? 'பரதேசி படம் பார்த்து ரொம்ப ஃபீல் ஆகிட்டேன். நமக்கும் படத்துல அடிமையா வந்தவங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லைன்னு நினைக்கறேன், நாமளும் நமக்கு முன்னாடி கிளம்பின சீனியர்ஸ், சினிமாவுவல வர காரு, பங்களாவ'லாம் பார்த்து இங்க வந்துட்டோம். உள்ள வந்தாதான் எவ்வளவு கங்காணிங்க நம்மள மாதிரி ஆட்டை கொக்கி போட்டு இழுத்து வந்திருகாங்கன்னு உணர முடிஞ்சிது. என்ன அவங்கள சவுக்கால அடிக்கறாங்க, இவங்க நம்மள பணத்தால, ரேடிங்கால அடிக்கறாங்க, அங்க அதர்வாவுக்கு காலுல சங்கிலி இங்க நமக்கு கழுத்துல ஐ.டி.கார்ட். நாமளும் நம்ம சொந்தக்காரங்க இங்க நம்ம பேச்சை கேட்காம வந்து சேர்ந்திட்டா நாயன்மாரேன்னு வயித்துல வாயில அடிச்சிக்கறோம்.' இந்த ஐடியாவா வெச்சு ஒரு ஸ்டேடஸ் போட்டேன் டா.
'வாழ்கையில விரக்தியா இருக்கிறவங்க பாலா படத்துல வர மாதிரி மொட்டை அடிச்சிகிட்டு, கை காலுல சங்கிலி போட்டு பைத்தியம் மாதிரி காட்டுல மேட்டுல திரியணும்னு அவசியம் இல்லை. நல்ல புல் ஹான்ட் ஷர்ட் போட்டு, முடிவெட்டி, டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணி, கழுத்துல ஐடி கார்டோட உங்கள கிராஸ் பண்ற ஒருத்தனா கூட அந்த ஆள் இருக்கலாம்'ன்னு போட்டேன் டா. இப்படி நான் பல ஸ்டேடஸ் போடற்துனால என் ப்ரண்ட்ஸ்ல சில பேரே என்ன அன்-ப்ரன்ட் பண்ணிட்டாங்க."
***
"இந்த ஏரியாவுல வீடு வாடகைக்கு கேட்டு போனா குறைஞ்சது பதினஞ்சுலேந்து இருபத்தஞ்சாயிரம் வரைக்கும் வாடகை கேட்கறாங்க. பழக்கடைக்காரர் என்ன சார் இருபது ரூபாய்க்குலாம் பழம் வாங்கறீங்க.. நீங்க ஐ.டி ஒரு நூறு ரூபாய்காவது வாங்க வேண்டாமான்னு கேட்கறார். டீ குடிச்சிட்டு மிச்ச சில்லறையை கேட்டா... என்ன சார் இப்படி அசிங்கமா சில்லறையை கேட்கறீங்க, எதாவது பூமர், சாக்லேட் எடுத்துக்கோங்கன்னு சொல்றாரு. என்னோட பேசிக் மாடல் மொபைல பார்த்திட்டு சித்தப்பா என்னடா ஒரு ஆப்பிள் வெச்சிக்க வேணாமா? நீயெல்லாம் என்ன ஐ.டி இன்ஜினியறோ!ன்னு கேட்கிறார். நாம ஏதோ ஆகாசத்த பிச்சுகிட்டு சம்பளம் வாங்குற மாதிரி இந்த சமூகம் நம்மள பார்க்குது. என் வாழ்க்கையை நான் எப்படி இவங்களுக்காக வாழ முடியும்?"
"சரி எதுக்கு இவ்ளோ சூடாகரீங்க? ஒரு கல்யாணத்தை பண்ணி செட்டில் ஆக வேண்டியது தானே?"
"அது ஒண்ணு தான் குறைச்சல் எனக்கு. இன்னிக்கு என் தங்கச்சி கையை புடிச்சு அழறா! காத்தால ஒன்பது மணிக்கு அவ வீட்டுலேந்து கிளம்பினா வீட்டுக்கு போக நைட் ஒன்பது மணி ஆகுது. குழந்தைக்கு காய்ச்சலாம், ரொம்ப கொதிக்கிறதிங்குறா? 'அப்பத்தாவ பார்த்துக்க சொல்லிட்டு இங்க கிளம்பி வந்திட்டேன், வேலையை விட்டுடறேன்னு சொன்னா அவர் கேட்க மாட்டேங்குராறு நீங்க அவருக்கு சொல்லி புரிய வைங்கன்னு' சொல்றா. நான் மச்சான் கிட்ட சொன்னா 'சென்னை விலைவாசி ஜாஸ்தியா இருக்கு ரெண்டு பேர் வேலை பார்த்தாதானே மச்சான் நல்லா காசு சேர்த்து நாளைக்கு பையனுக்கு நல்ல வாழ்க்கை உண்டாக்கித் தர முடியும்னு' சொல்றாரு.
இத்தனைக்கும் அவருக்கு ஊர்ல நல்லா சொத்து இருக்கு. ஆனாலும் கேட்டா அப்பா சேர்த்தது, நானா சொந்தமா என் பையனுக்கு சேர்த்து வைக்கணும்னு சொல்றாரு.
இதே மாதிரி ஒவ்வொரு பையனும் அப்பா சேர்த்து வெச்சது வேண்டாம் நாம தனியா சேர்த்து வைக்கனும்னு நெனச்சா அப்போ ஒவ்வொரு அப்பாவும் எதுக்கு சேர்க்கணும்? எல்லாத்தையும் செலவு பண்ணிட்டு ஜாலியா இருக்கலாமே! இவங்க குழந்தையை நல்லபடியா வளர்கணும்னு மறந்திடறாங்க சும்மா காசு சேர்க்கணும், காசு சேர்க்கணும்னு மட்டும் அலையறாங்க. என் வாழ்க்கைக்கே என்ன தேவைன்னு என்னால இப்போ உணர முடியல, இதுல ஒரு கல்யாணம் பண்ணி என் பையனுக்கு இது தேவைப்படும்ன்னு நான் எப்படி சொல்ல முடியும்? அதுக்கு தான்பா எனக்கு இந்த கல்யாணமே வேணாங்குறேன்னு சொல்றேன்."
வணிகமயமாக்கப்படும் அன்பு:
பட்டர்ப்ளை எபக்ட், கேயாஸ் தியரி என்றெல்லாம் கூறுவார்கள் உலகத்தில். ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வின் தாக்கம் வேறொரு இடத்தில் கண்டிப்பாக உணரப்படும் என்பது தான் அதன் சாராம்சம். இப்போது கூறப்படும் ஒரு கதையும் நிகழ்வுகள் முன்கூறிய கதையின் தொடர்ச்சியாக நிகழ்வில் அமைய வாய்ப்புண்டு.
ஐ.டி நிறுவனத்திலே பத்து வருடங்களாக வேலைப் பார்ப்பவர் இவர். ஐ.டியிலே ஒரு பெண்ணை காதலித்து மணமுடித்த இவரின் வாழ்க்கையும் ஏறத்தாழ முன் கூறிய கதையுடன் ஒத்துப்போகும். குழந்தைக்கு நிறைய காசு சேர்க்க வேண்டும் என்று இவரின் மனைவியும் அலைந்து ஆன்சைட் வாய்ப்பினை பிடித்து வெளிநாட்டிற்கு சென்று விட்டார். தினமும் இவ்விருவர் ஆன்லைனில் ஸ்கைப்பினில் பேசுவதுண்டு. டேய் ஒரு முறை அம்மாக்கு ஹாய் சொல்லுடா? இங்க பாரு டா? என்று தினமும் இவர் மனைவி தன் மகனிடம் குழைகிறாராம். ஆனால் இதற்கெல்லாம் செவி சாய்க்காமல் அந்த ஐந்து வயது சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே இருக்கிறானாம்.
'டேய் அம்மா உனக்கு என்னெல்லாம் வாங்கிருக்கேன்னு பாரு டா' என்றார் இவர் மனைவி. உடனே அடித்து பிடித்து லாப்டாப் முன் அமர்ந்தான் அச்சிறுவன். இப்போதெல்லாம் குழந்தைகள் எவ்வளவு கமர்ஷியலைஸ்ட் ஆகிட்டாங்கன்னு பார்த்தீங்களா? என்கிறார் அவர்.
இது யார் தவறு? அக்குழந்தையின் தவறா? பணம் சேர்ப்பது மட்டும் தான் கடமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் இதைப்போன்ற பெற்றோர்கள் நாளை சமுதாயத்தில் தன் மகன் எத்தகு குடிமகனாக வருவான் என்று யோசித்து பார்த்திடாமல் பணம் பின்பு மட்டும் ஓடுவதே இதற்கு காரணம். சரி, இத்தனை நாட்கள் தாத்தா பாட்டி இருக்கும் தைரியத்தில் குழந்தையை அவர்களிடம் விட்டுவிட்டீர்கள் நாளைக்கு உங்களுக்கு வயதாகும் போது குழந்தைகள் உங்களினும் பிசியாக இருப்பார்களே அப்போது அவர்கள் உங்களை எங்கே விடுவார்கள் என்று யோசித்து பார்த்தீர்களா?
காலியான பேருந்தில் இரவில் பயணம் செய்யும்போது இந்த அனுபங்கள் எல்லாம் மனதிற்குள் புகுந்து 'எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்' என்ற சேது பாடலை செவிகளில் ஒலிக்கச் செய்கிறது.


எது நமக்கான மருத்துவம்?

மருத்துவம், நமது அடிப்படை உரிமை. ஏனென்றால் மருத்துவம் என்பது எல்லா உயிர்களின் உள்ளுணர்வின் ஞாபக அடுக்குகளில் உறைந்துள்ள செயல்பாடுதான். நாய், பூனை போன்ற உயிரினங்களைக் கவனித்துப் பார்த்தால் தெரியும். உடல்நிலை சரியில்லையென்றால் அவை உணவெடுப்பதில்லை.
நாய் அருகம்புல்லைக் கடித்துத் தின்னும். சிறிது நேரத்திலேயே வயிற்றில் செரிக்காமல் தங்கிவிட்ட விஷப்பொருளைக் கக்கிவிடும். நாய்க்கு எப்படி அருகம்புல் மருந்து என்று தெரியும்? அதன் உள்ளுணர்வில் பதியப்பட்டுள்ள மருத்துவக் குறிப்பு ஞாபகத்தின் மேலடுக்குக்கு வந்து, அதற்கு வழிகாட்டுகிறது. ஆனால், மனிதன் சமூகவயமானபோது கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உள்ளுணர்வின் பதிவுகளை அழித்துவிட்டான்.
சிகிச்சையின் தொடக்கம்
வேலைப் பிரிவினைகள் உருவானபோது மருத்துவம், மந்திரம், சடங்குகளோடு இணைந்துவிட்டது. ஆரம்பத்தில் மருத்துவம் உன்னதமான சேவையாகக் கருதப்பட்டது. மருத்துவத்துக்கு ஈடாகப் பொருள் பெறுவது பாவம் என்று நம்பிய காலம் ஒன்றிருந்தது. மருத்துவர் என்று ஒரு சாதியே உருவானது. ஆனால், எல்லா நோய்களுக்கும் மருத்துவர்களைத் தேடிப் போனதில்லை.
சாதாரண நோய்களைப் பெரும்பாலும் கை வைத்தியத்திலேயே வீடுகளில் குணப்படுத்திவிடுவார்கள். காய்ச்சல், சளி, தலைவலி என்று அடிக்கடி வரக்கூடிய நோய்களுக்கு உணவுப் பத்தியம், பச்சிலைச் சாறு, கஷாயம், சூரணம் கொடுத்துக் குணப்படுத்திவிடுவார்கள். உணவே மருந்து, மருந்தே உணவு என்று இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலங்கள் இருக்கத்தான் செய்தன. சித்தர்களின் தாக்கம் எப்படி நம்முடைய வாழ்விலும் உணவு முறைகளிலும் இருக்கிறது என்பது தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.
எது நவீனம்?
ஆனால், இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தைத் தவிர வேறு மருத்துவம் இருக்கிறதா என்றுகூடத் தெரியாது. ஆங்கில வைத்தியம் மட்டும்தான் நவீன மருத்துவம். மற்றதெல்லாம் நாட்டு வைத்தியம் எனப்படும் ‘கண்ட்ரி மெடிசின்’. நோயுற்ற மனிதனை நம்பாமல், சோதனைச் சாலை முடிவுகளின் அடிப்படையில் மட்டும் மருத்துவம் செய்யும் ஆங்கில மருத்துவம், நவீன மருத்துவம் என்று பெயர் பெற்றிருக்கிறது.
எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் நமது உயிரையும் உடலையும் தன்னிச்சையாகக் கையாளுவதற்கு உரிமை கிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி அறிந்துகொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்கவிளைவுகள், எல்லாவற்றைப் பற்றியும் சொல்வதற்குக் கடமைப்பட்டவர்கள் மருத்துவர்கள். எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத் துறைகளைப் போலவும் மருத்துவத் துறையை அவர் படித்திருக்கிறார், அவ்வளவுதான். அதேபோல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது.
வாழ்க்கைக் கண்ணோட்டம்
தத்துவம் என்றால் என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால், வாழ்க்கையைப் பற்றிய விளக்கம், கண்ணோட்டம். உதாரணத்துக்கு, இந்த வாழ்க்கையில் நாம் பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டநஷ்டங்களுக்குக் காரணம் நம்முடைய தலைவிதி என்று பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அது ஒரு தத்துவ வெளிப்பாடு.
இல்லை இந்தக் கஷ்டநஷ்டங்களுக்குக் காரண காரியங்கள் இருக்கின்றன என்று சிறுபான்மையோர் நினைக்கிறார்கள், அதுவும் ஒரு தத்துவ வெளிப்பாடுதான். இப்படி வாழ்வின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு தத்துவ நோக்கு பின்னிப் பிணைந்துள்ளது. நாளுக்கு நாள் நம்முடைய உணவுப் பழக்கம், உடை, இருப்பிடம் என்று எல்லாமே மாறிக் கொண்டேயிருப்பதற்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவமே அரசு நிர்வாகத்தைக் கட்டமைக்கிறது, செயல்படுத்துகிறது. தத்துவத்தின் பார்வையைப் பொறுத்தே அந்தத் தத்துவம் யாருக்கானது, அதன் நோக்கம் என்ன என்று தெரிந்துகொள்ள முடியும். முதலாளித்துவத் தத்துவம் முதலாளிகளுக்குச் சார்பான அரசியல், சட்டம், நீதி, கல்வி ஆகியவற்றைத்தான் செயல்படுத்தும். போலியான ஜனநாயக நடைமுறைகள் மூலம் மக்களை ஏமாற்றும். எனவே, சாமானியர்கள் இந்த முதலாளித்துவத்தின் அசுர நிதி மூலதனப் பசிக்கு இரையாவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், எல்லாத் தத்துவங்களும் தங்கள் கருவுக்குள்ளேயே, அதற்கு மாற்றான தத்துவத்தின் விதைகளைக் கொண்டிருக்கும்.
மருத்துவத் தத்துவம்
எல்லாவற்றிலும் இருப்பதைப் போல மருத்துவத்துக்கும் ஒரு தத்துவப் பார்வை உண்டு. அதுதான் அந்த மருத்துவ முறையைத் தீர்மானிக்கிறது.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகள் நிலப்பிரபுத்துவத் தத்துவப் பார்வை கொண்டவை என்றால், ஆங்கில மருத்துவ முறை முதலாளித்துவத் தத்துவப் பார்வை கொண்டது. நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் மருத்துவம் புனிதமானதாகக் கருதப்பட்டது. அது மந்திரத்தன்மை கொண்டதாகவும், ரகசியமாகச் செய்ய வேண்டியதாகவும் கருதப்பட்டது. அந்த மருத்துவ ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அப்படிப் பகிர்ந்து கொண்டால், அது பலிக்காது என்றும் நம்பப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தின் உற்பத்தி உறவுகளைப் போலவே, மருத்துவமும் மதிப்பு மிக்கதாக இருந்தது. மனிதர்களின் தனித்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தது.
ஆங்கில மருத்துவ முறை முதலாளித்துவத் தத்துவப் பார்வை கொண்டது. அதற்குச் சந்தைதான் முக்கியம். எல்லாவற்றையும் விற்கவோ, வாங்கவோ முதலாளித்துவம் முயலும். பேராசை கொண்ட அதன் லாப வெறிக்கு எதுவும் பொருட்டல்ல. அதன் உற்பத்தி உறவுகள் சந்தையோடு தொடர்புடையவை என்பதால், அது எதையும் மதிக்காது. எந்த விழுமியங்களையும் ஏற்காது. அப்படியே தன்னுடைய சந்தைத் தேவைகளுக்கேற்ப மதிப்பீடுகளை மாற்றிக் கொண்டேயிருக்கும். அதற்கு எல்லாமே, எல்லாருமே பண்டங்கள்தான். எப்படி மனிதர்களுக்காகப் பொருட்களையும் பொருட்களுக்காக மனிதர்களையும் உருவாக்குகிறதோ, அதேபோல நோய்களுக்காக மருந்துகளையும் மருந்துகளுக்காக நோய்களையும் அது உற்பத்தி செய்யும்.
மாற்று மருத்துவம்
உதாரணத்துக்கு, இப்போது பிரசவம் என்றாலே அது சிசேரியன்தான் என்றாகிவிட்டது. இது திட்டமிட்டுப் பணம் பறிப்பதற்கான செயலாக மாறிவிட்டது. நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களில் பாதிப் பேருக்குக் கர்ப்பப்பையை எடுத்துத் தூரப் போட்டாகிவிட்டது. சம்பந்தமில்லாமல் கூட்டம் கூட்டமாகத் தடுப்பூசிகளைப் போடச் செய்வது... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். மனிதன் ஒரு முழுமையான இயங்கியல் உயிரினம் என்பதை மறுத்து, அவனை ஒரு எந்திரமாகப் பாவித்து எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து வேலை பார்க்கிறது ஆங்கில மருத்துவம். எதிர்காலத்தில் ஒரு சமூகத்தையே ஊனமுள்ளதாக்குகிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. சிலர் மட்டும் செல்வத்தில் கொழிக்க, பெரும்பான்மை மக்கள் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழக்கின்றனர். இது அதன் தத்துவப் பார்வையின் அடிப்படையில் உருவான நடைமுறை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால், நமக்குத் தேவை மானுடமயமான தத்துவப் பார்வை கொண்ட மருத்துவம். அது, அடிப்படையில் சமூகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். தெளிவான தத்துவ நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். எந்த ரகசியங்களோ, மர்மங்களோ இல்லாததாக, இயற்கையின் விதிகளுக்கு ஏற்பச் செயல்படுகிற மருத்துவமாக இருக்க வேண்டும். பக்கவிளைவுகள் இல்லாத எளிமையான, இனிமையான, முழுமையான நலனை மீட்டுத் தர வேண்டும். சுருக்கமாக, அது மக்கள் மருத்துவமாக இருக்க வேண்டும்.

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும் உடல்நலனைப் பாதிக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?
#சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் புற்றுநோய் ஏற்பட எந்த அளவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டோ, அவ்வளவு பெரிய தீமை இது.
#உணவு சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது, அது கெடுதல். அது காற்றை வயிற்றுக்குள் அனுப்பி, வயிறு உப்புசத்துக்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழத்தைச் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி, 2 மணி நேரத்துக்குப் பின்னர் பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
#சாப்பிட்டவுடன் தேநீர் குடிக்காதீர்கள். தேயிலையில் அமிலத்தன்மை உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தைக் கடினமாக்கிச் செரிமானத்தைக் கடினமாக்கும் வாய்ப்பு உண்டு.
#சாப்பிட்ட பிறகு பெல்ட்டுகளைத் தளர்த்திவிடாதீர்கள். அது குடலை வளைத்துத் தடுக்க வாய்ப்புள்ளது.
#சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கம் கூடாது. குளிக்கும்போது உடல், கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வயிற்றுச் செரிமானத்துக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை இது பாதிக்கக்கூடும்.
#சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று விவரமறிந்தவர்கள்கூடச் சொல்வது உண்டு. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்க, உடனடி நடை உதவும் என்றுகூடச் சிலர் சொல்லலாம். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, உணவின் சத்துகளை ரத்தத்தில் சேர்க்கவிடாமல் அந்த நடை செய்துவிடும். எனவே, இந்தப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.
#மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்துத் தூங்கக் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். அப்போதுதான் உணவு முறையாகச் செரிக்கும்.

Saturday, 5 July 2014

யோகாவே மருந்து

யோகாவே மருந்து
இன்று யோகாவைப் பலரும் நாடுகிறார்கள். யோகாவும் காலத்துக்கு ஏற்ப வேகமாக நவீனமடைந்துவருகிறது. உடல் உபாதைகள் முதல் மனஅமைதிவரை பல்வேறு நோக்கங்களுக்காக யோகா இன்று பயிலப்படுகிறது. முதுகு வலி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்காகவும் பலர் யோகாவை நாடும் நிலையில், நவீன அறிவியல் வெளிச்சத்திலும் யோகப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதில் வியப்பில்லை.
குழந்தைகளும் யோகாவும்
சிறு வயதிலிருந்தே யோகாவைக் குழந்தைகளுக்கு ஒரு பழக்கமாக அறிமுகப்படுத்திவிட்டால், அது அவர்களுக்கு வாழ்க்கை முழுக்க உதவி செய்யும் என்பது கிருஷ்ண யோகாவின் அணுகுமுறை. "யோகாவின் ஒவ்வொரு நிலைக்கும், ஆசனத்துக்கும் ஒரு கதையை உருவாக்கி, அதன் மூலம் குழந்தைகளுக்கு யோகாவை அறிமுகப்படுத்துகிறோம். இந்த முறையைப் பின்பற்றுவதால் குழந்தைகளுக்கும் யோகா பிடித்துப்போகிறது. பிராணயாமா போன்றவற்றை சிறு வயதில் இருந்தே செய்துவருவது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றும்
யோகாவே மருந்து
"யோகா செய்வதால் சில சமயம் அறுவை சிகிச்சையைக்கூடத் தவிர்க்க முடியும். ஆனால், பலனை உடனடியாக எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். இந்த யோகா சிகிச்சையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான அம்சம் பொறுமை. மருந்துகளோடு இணைந்து நோயை வேகமாக குணப்படுத்துவதை, இந்த யோகா சிகிச்சை சாத்தியப்படுத்துகிறது. லிகமென்ட் எனப்படும் எலும்புகளைப் பிணைக்கும் தசைநாரில் ஏற்படும் பிரச்சினைகளுக்குக்கூட யோகாவில் தீர்வு இருக்கிறது
உடலே நம் வாகனம்
உடல்தான் மனித வாழ்வுக்குப் பிரதானம். அந்த உடலுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்குப் பெரும் உதவியாக யோகா இருக்கிறது. யோகா துல்லியமான அறிவியல், "உடலைப் புத்துணர்ச்சியாக உணர வைப்பதில் யோகாவுக்கு நிகர் எதுவும் இல்லை. பல மணி நேர ஜிம் பயிற்சியால் செய்ய முடியாததை, யோகாவால் எளிமையாக செய்துமுடித்துவிட முடியும். ஏரோபிக் பயிற்சிகள் ஏற்படுத்தும் விளைவைக்கூட யோகாவில் கொண்டுவர முடியும்,"
உடல் பருமனுக்குத் தீர்வு
உடல் பருமனைச் சமாளிப்பதற்குப் பலரும் பல வகையான சோதனைகளை மேற்கொண்டுவருகிறார்கள். ஆனால் எளிமையான வழிகள் மூலம் உடல் பருமனை யோகாவால் கட்டுப்படுத்த முடியும்,
மதம் அவசியமில்லை
யோகாசனப் பயிற்சிகளைச் செய்வதில் பலருக்கு இருக்கக்கூடிய ஒரு சிக்கல் அது மதத்தை, இந்திய ஆன்மிகத்தை முன்னிறுத்தக்கூடியது என்பதுதான். "அப்படிப்பட்ட எண்ணத்துக்கு அவசியமே இல்லை", யோகாவுக்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. யோகாவை எந்த மதச் சார்பும் இல்லாமல் அணுக முடியும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். "யோகாவை முழுமையான ஒரு அறிவியலாகப் பார்க்க முடியும். இதற்கு எந்த மதச் சாயமும் அவசியம் இல்லை",
யோகாசனப் பயிற்சிகள் சிலவற்றில் ஸ்லோகங்கள் சொல்லித் தரப்படுகின்றனவே என்று கேட்டதற்கு, "ஸ்லோகங்கள் சொன்னால்தான் யோகா என்பதல்ல. இது அடிப்படையில் உடல், மனம், மூச்சு ஆகியவற்றின் ஒருங்கிணைவைச் சத்தியப்படுத்துகிறது. மன ஒருமைப்பாட்டுக்குப் பயிற்சி அளிக்கிறது. பக்தியோ, வழிபாடோ தேவைப்படுபவர்கள் அவற்றின் துணையோடு யோகாவை அணுகலாம். மற்றவர்கள், அவற்றின் துணை இல்லாமலேயே யோகாவைப் பயிற்சி செய்யலாம். இரண்டுக்கும் யோகாவில் இடம் உண்டு"
பயிற்சியாளர் அவசியம்
வலிமை, நெகிழ்வுத்தன்மை, தாங்கும் திறன் இந்த மூன்றும் சமமாகக் கலந்திருக்கும்போது, அது ஒரு முழுமையான யோகாவாக இருக்கும். "ரத்தத்தின் திசைவேகத்தைக்கூட யோகாவால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் யோகாவைப் பயிற்சியாளர் இல்லாமல் செய்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்
அறிவியல் கலை
யோகாசனப் பயிற்சிகள், யோகா சிகிச்சை என்றதும் தன்னால் முடியுமா, உடம்பு வளையுமா என்பது போன்ற கேள்விகள் சிலருக்கு எழலாம். அவரவர் உடல்நிலைக்கு ஏற்பப் பயிற்சிகளையும் சிகிச்சைகளையும் வழங்குவதால் இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை கயிறு, கரக்கட்டைகள், மேசை முதலான பல கருவிகள் மூலம் பயிற்சிகள் இங்கே எளிமையாக்கப்படுகின்றன. ஒவ்வொருவரது உடல்நிலை, அவரவர் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப யோகா சிகிச்சையும் பொதுவான யோகப் பயிற்சிகளும் தரப்படுகின்றன.

குடிப் பழக்கம்

இப்போதெல்லாம் நமது சினிமா ஹீரோக்கள் வசனம் பேசும் காட்சிகளைவிட கையில் மது பாட்டிலோடு புலம்பும் காட்சிகள்தான் அதிகம். அக்காட்சிகளுடன் கூட வரும் ‘மது அருந்துதல் உடல் நலத்துக்குக் கேடு’ என்ற எச்சரிக்கை வாசகமும் நமக்குப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. ஆனால், உண்மை நிலைமை மிகவும் மோசம். இந்தியாவில் சுமார் 75% ஆண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மது அருந்துகின்றனர். இதில் 20-30% பேர் அதற்கு முழு அடிமையாகிறார்கள். குடிப்பழக்கம் பெரும்பாலும் 15-25 வயதில்தான் ஆரம்பிக்கிறது. 50-60% சாலை விபத்துகள் குடிபோதையினால்தான் ஏற்படுகின்றன.
மது குடிப்பது முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் பாட்டில் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கி றார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளி யாகவே மாறி விடுகிறார்கள்.
யார் போதைக்கு அடிமை?
பொதுவாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் குடிப்பழக்கத்தைப் பற்றி விசாரித்தால் “நீங்க நினைக்கிற மாதிரி நான் மொடாக்குடிகாரன் கிடையாது டாக்டர்” என்ற பதில்தான் முதலில் வரும். ஆனால், உண்மை வித்தியாசமானது. குடிப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையா, இல்லையா என்பதை நிர்ணயிக்கச் சில வரைமுறைகள் இருக்கின்றன. இது தனிப்பட்ட நபரின் எண்ணத்தைப் பொறுத்தது அல்ல. கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் சில காரணங்கள் இருந்தாலே, அந்நபர் போதைக்கு அடிமை என்றே அர்த்தம்.
# தினசரி குடிப்பது, மற்ற விஷயங்களைவிட குடிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது.
# ஆரம்பத்தில் குடித்ததைவிட அதிகம் குடித்தால்தான் போதை ஏற்படுகிறது என்ற நிலை.
# பல முறை முயன்றும் குடியை முழுவதுமாக நிறுத்த முடியாமல் தோல்வியடைதல்.
# உடல்நலத்துக்குக் கேடு என்று தெரிந்தும் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்ட பின்னரும் குடியை நிறுத்த முடியாமை.
# குடித்தால்தான் தூக்கம் வரும் அல்லது கைநடுக்கம் குறையும் என்ற நிலை.
குடிப்பதற்குக் கூறும் காரணங்கள்
‘இந்தக் கண்றாவியையா குடித்தோம்' என்ற குற்றவுணர்வோடு சிலர் காலையில் எழுவது உண்டு. ஆனால், காலையில் பிள்ளையின் தலையில் சத்தியம் செய்து சென்ற பின்னரும், மாலையில் போதையோடுதான் வீடு திரும்புவார்கள். சிலர் பெட் காபி போல் காலையில் கண் விழிப்பதே மது பாட்டில் முன்புதான். இந்த இரண்டு நிலையுமே தீவிரமான அடிமைத்தனத்தின் அறிகுறிகள். தான் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை ஒருவர் உணர்ந்து ஒத்துக்கொள்வதுதான் மாற்றத்தின் முதல் படி.
பெரும்பாலும் குடிப்பவர்களைக் கேட்டால் தாங்கள் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள். கூலி வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் உடல்வலியை போக்கக் குடிப்பதாகவும், இளம்வயதினரைக் கேட்டால் நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்லது ஜாலி மூடில் இருந்ததால் குடிப்பதாகவும், சிலர் கவலையை மறக்கக் குடிப்பதாகவும் காரணம் சொல்வார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சாக்குப்போக்குகள்தான் நாளடைவில் குடியைத் தொடர்வதற்குக் காரணமாகிவிடும்.
நிறுத்தினால் என்ன பிரச்சினை?
தீவிர குடிப்பழக்கம் இல்லாதவர்கள் எப்போது நிறுத்தினாலும் பிரச்சினை இல்லை. ஆனால், தினசரி ஆல்கஹாலுக்குப் பழகிப்போன மூளை நரம்புகள், திடீரென குடியை நிறுத்தும்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில தொந்தரவுகளைத் தருவது உண்மைதான். எனவே, அதிகப் போதைக்கு அடிமையானவர்கள் குடியை நிறுத்திய சில மணி நேரத்தில் கை, கால் நடுக்கம், தூக்கமின்மை, பதற்றம், வாந்தி, எரிச்சல் உணர்வு போன்றவை ஏற்படலாம். சிலருக்கு நிறுத்திய ஓரிரு நாட்களில் வலிப்பு அல்லது யாரோ பேசுவது போல் குரல் கேட்பது, உருவங்கள் தெரிவது, அதீத பய உணர்வு போன்றவை ஏற்படலாம். திரும்பக் குடித்தால்தான் இவை சரியாகின்றன என்ற காரணத்தைக் காட்டியே குடியைத் தொடர்வது ஆபத்தையே விளைவிக்கும்.
தொடர் குடியால் நாளடைவில் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பாதிப்புகளைவிட மேற்கூறிய தொந்தரவுகள் மிகச் சாதாரணமானவை. மேலும் மருந்துகளால் கட்டுப்படுத்தக் கூடியவை. தினசரி 800 மி.லி. குடித்தால்தான் போதைவரும் என்ற நபருக்கு, 500 மி.லி. குடித்தால் போதை ஏற்படாது. இப்படிப்பட்டவர்கள் படிப்படியாகக் குடியை நிறுத்துவது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, அதிக அடிமைத்தனத்துக்கு ஆளானவர்கள் மருத்துவ உதவியுடன் உடனடியாக, முழுவதுமாக நிறுத்தும் முறையே சிறந்தது.
மேற்கண்ட குடிபோதை நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் ‘சுயக் கட்டுப்பாடு வேண்டும்’, ‘உன்னால் முடியும்’ என்பது போல இலவசமாகக் கிடைக்கும் அறிவுரைகள் எந்தப் பலனையும் தராது. ஏனென்றால், மூளை நரம்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஏற்படும் மேற்குறிப்பிட்ட தொந்தரவுகளைச் சரிசெய்ய மனநல மருத்துவரின் உதவி அவசியம்.
குடி தருவது என்ன?
ஆல்கஹால் உடலில் சேரும் இடம் கல்லீரல்தான். இதனால் நாளடைவில் மஞ்சள்காமாலையில் ஆரம்பித்து கல்லீரல் செயலிழந்து போவதுவரை உடல்நலப் பிரச்சினைகள் தோன்றலாம். அல்சர், இதய வீக்கம் மற்றும் செயலிழப்பு, நரம்பு கோளாறுகள், கணைய வீக்கம், வைட்டமின் குறைபாடுகள், உணவு மண்டலத்தில் புற்றுநோய் போன்றவை மற்ற முக்கியப் பாதிப்புகள்.
பாதிக்கு மேற்பட்டோர் மனக்குழப்பங்கள், மனப்பதற்றம், மன அழுத்தம், தூக்கம் சம்பந்தப்பட்ட நோய்கள், செக்ஸ் பிரச்சினை போன்ற மனநலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். இது தவிர சமுதாயத்தில் சுயகௌரவத்தை இழத்தல், குடும்பப் பிரச்சினைகள், பணவிரயம் மற்றும் கடன், தனிமனித உறவு பாதிப்பு, விபத்துகள், தற்கொலை எனப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
‘வாழ்க்கையின் எத்தனையோ முக்கியமான சந்தோஷங்களை இழந்துள்ளோம் என்பதை, இப்போதுதான் உணர்கிறோம்’ என்பதுதான் குடிபோதையிலிருந்து மீண்டவர்களில் பெரும் பாலோர் சொல்லும் கருத்து. காலம் கடந்த பின் வருந்துவதைவிட, விழிப்புடன் போதையை எதிர்த்துச் செயல்பட்டால் தனிநபருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்வாழ்வுதான்.
குடிப் பழக்கம் நிறுத்திய பின்
#எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சும்மா இருப்பது தேவையற்ற சிந்தனைகளைத் தூண்டும்.
#ஏற்கெனவே, குடிப்பதைத் தூண்டிய சூழ்நிலைகள், மனநிலைகளில் கவனமாக இருக்கவேண்டும். உதாரணமாக பார்ட்டி, விழாக்களுக்கு மனைவியுடன் சேர்ந்து செல்லுதல், குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அங்கு இருப்பதைத் தவிர்ப்பது போன்றவை பலன் கொடுக்கும்.
#நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலோ அல்லது ‘நீ குடிக்கவேண்டாம் சும்மா பக்கத்தில் இரு’ என்று சொன்னாலோ, அந்த இடத்தில் தொடர்ந்து இருப்பது விஷப்பரீட்சைதான்.
#குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மிக அவசியம்
#முடிந்தால் ஒரு உண்டியல் வாங்கி, முன்பு தினமும் குடிப்பதற்குச் செலவு செய்த தொகையை அதில் போட்டு, சில மாதங்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் குடிப்பதற்காக எவ்வளவு பணத்தை வீணடித்திருக்கிறோம் என்பது புரியும். இது மனரீதியாக நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
#சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் அவசியம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டும் தூங்குவதற்குச் சில நாட்கள் மருந்து உட்கொள்ளலாம்.
#‘இன்றைக்கு ஒரு நாள் மட்டும் தானே’ என்று சலனப்பட்டால் இறுதியில் பழைய நிலைமைக்குச் சீக்கிரமே சென்றுவிடும். இதற்கு பீர் ஒன்றும் விதிவிலக்கல்ல. விஸ்கியில் 35-40% எத்தனால் இருப்பது போலப் பீரிலும் 5-10% உள்ளது.